ஏவி.எம். சரவணன் மறைவு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆழ்ந்த இரங்கல்
“தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் AVM நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ – அதே அளவுக்கு AVM நிறுவனத்தின் பாதையை அமைத்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.
புதல்வராகவும் திரைத்துறை ஆளுமையாகவும் ‘அப்பச்சி’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுடைய புகழில் மேலும் புகழ் சேர்த்தவர் சரவணன் அவர்கள்.
பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறன் அவர்களின் “குலதெய்வம்” உள்ளிட்ட புகழ்பெற்ற படைப்புகள் மூலம் AVM நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நீண்ட வரலாற்றுச் சேர்க்கை உள்ளது. அந்த பந்தம் குடும்ப பாசமாகி, எங்கள் குடும்பத்துடனும் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம். சரவணன் அவர்கள்.
2023 மே மாதத்தில் AVM Heritage அருங்காட்சியகத்தை நான் பார்வையிட்டபோது ஏற்பட்ட நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்பாகக் கொண்டு எல்லோரிடமும் அன்போடு பழகிய அவர் இழப்பு திரையுலகிற்கும் சமூகத்திற்கும் பெரிய துயரமாகும்.
அவரது மறைவால் வாடும் AVM குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
— மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின்